Monday 13 February 2012

நாமக்கல்



நாமக்கல்
ஒரு பக்கம் கோட்டை, இன்னொரு பக்கம் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேட்டை. நடுவில் உயர்ந்து நிற்கும் நாமகிரிமலை. இதுதான் நாமக்கல் கிழக்கே கோட்டையும் மேற்கே பேட்டையுமாகப் பிரிந்து கிடக்கும் இந்த நகரம் தற்போது கோழிப்பண்ணைகளுக்குப் பெயர் போனதாக உள்ளது. ஆனால் இயற்கை எழிலும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. நாமக்கல்லைச் சுற்றியுள்ள ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வட்டங்களைச் சேர்த்து கடந்த 1.1.97 முதல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய நாமக்கல் மாவட்டம் முன்பு சேலம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இந்த மாவட்டத்தில் காண வேண்டிய கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோமா!
ஐயாறு
சித்தன் குட்டி மலையின் உச்சியில் தோன்றும் ஐந்து ஆறுகளான ஆரோச்சி ஆறு. கானப்பாடி மூலை ஆறு, மாசி மலை அருவி, நக்காட்டு ஆறு எனும் ஐந்து ஆறுகளும் சங்கமித்து ஒன்றாக உருவெடுத்து வருவதால் இந்த ஆற்றுக்குப் பெயர் ஐயாறு. 4500 அடி உயரத்திலிருந்து வரும் இந்த ஆற்றுக்கு வெள்ளைப் பாழி ஆறு என்றும் பெயர். கொல்லி மலையின் பல இடங்களைத் தொடும் இந்த ஆறு. அங்குள்ள அரப்பள்ளி ஈஸ்வரர் கோயிலுக்கு அப்பால் விழுந்து ஆகாச கங்கை எனப் பெயர் பெறுகிறது. அங்கிருந்து இம்மாவட்டத்தைவிட்டு வெளியேறி புளியஞ்சோலை என்னும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
கொல்லிமலை ஆகாச கங்கை அருவி
பச்சை மாமலைபோல் மேனி என்று கொல்லி மலையைப் பார்த்துத்தான் ஆழ்வார்கள் பாடி இருப்பார்களோ என்னவோ! அப்படி ஒரு பசுமை? எங்கு பார்த்தாலும் பச்சைப் படுதாவை போட்டு மூடிய மலைவெளிபோல விரியும் கொல்லிமலைத் தொடர். நாமக்கல்லிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1190 மீ. உயர்ந்து நிற்கும் கொல்லிமலையின் பரப்பு ஏறத்தாழ 400 சதுர மைல்கள். 28 கி.மீ. வடமேற்காக நீண்டும் 19 கி.மீ. கிழக்கு மேற்காக அகன்றும் கிடக்கும் இந்த மலைவெளியின் வளம் பெறும் பசுமை அன்று. அவ்வளவும் அரிய மூலிகைகள். அரப்பள்ளீஸ்வரர் கோயில் அரசு மூலிகைப் பண்ணை தாவரத்தோட்டம் என பார்ப்பதற்கு ரம்மியமான பல இடங்கள் உண்டு. அரப்பள்ளீஸ்வரர் கோயில் அருகில் விழும் ஆகாச கங்கை அருவி மூலிகை மகத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் ஓரிக்கு ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் பெரிய திருவிழாவே நடத்தப்படுகிறது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகளும் இங்கு உள்ளன. இந்தக் காற்று பட்டாலே நோய் விலகும் என்கிறார்கள் தமிழ் மருத்துவ வல்லுநர்கள்.
ஆஞ்சநேயர் கோயில்
ஒரே கல்லில் 200 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அனுமன் சிலை இங்குள்ளது. இதையடுத்துத்தான் கோட்டை அமைந்துள்ளது. இரண்டு குடவரைக் கோயில்களும் அமைந்துள்ளன. தொலைபேசி - 04286-233999.
அர்த்தநாரிஸ்வரர் கோயில்
தமிழகத்திலேயே சிவபெருமான் அர்த்தநாரிஸ்வரராகக் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான். திருச்செங்கோடு மலையில் உள்ள இந்தக் கோயில் மூலவரின் உயரம் 5 அடி. இந்த மூலவர் சிலையை சித்தர்கள் மூலிகைகளால் வடித்துள்ளதாகக் கருதப்படுகிறது. செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகனுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனி சந்நிதிகள் இந்தக் கோயிலில் உள்ளன.
கைலாசநாதர் கோயில்
அர்த்தநாரிஸ்வரர் கோயில் குன்றின் மீது இருப்பதால், இந்த சிவன் கோயிலை கீழ் கோயில் என்று அழைக்கின்றனர். பாண்டிய மன்னன் விக்கிரமன் இக்கோயிலைக் கட்டியதாகக் கருதப்படுவதால் விக்கிரம பாண்டீஸ்வரர் என்றும் கூறுவார்கள்.
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம்
20 ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களில் புகழ்பெற்ற பெருங்கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. 10.10.1888 இல் பிறந்த இவர் 1932 ஆம் ஆண்டு நடந்த உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை வீரர். காந்தியத்தின் மீது ஈடுபாடு கொண்ட கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு 21.2.2000 அன்று நினைவில்லம் திறக்கப்பட்டது. இது 39 கவிஞர் ராமலிங்கம் தெரு நாமக்கல் என்ற முகவரியில் உள்ளது.
நாமக்கல் துர்க்கம் கோட்டை
உறுதி வாய்ந்த இந்தக் கோட்டை தூண் வரலாற்றுத் தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. 1792 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையை மீட்டெடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் ஆங்கிலேயரிடம் பறிகொடுத்தார். ஹைதர் அலி வரலாறு என்பதே வீழ்ச்சியும் எழுச்சியும் பின்னிப் பிணைந்ததுதானே!

No comments:

Post a Comment